Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
போபால்: மத்திய பிரதேச மாநில அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டதில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவாளர்கள் அதிகம் பேர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கமல்நாத் முதல்வராக இருந்து வந்தார். அந்த கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியில் இருந்து பிரிந்து சென்றார்.
இதனால் காங்கிரஸ் மெஜாரிட்டியை இழந்தது. இதனால் கடந்த மார்ச் 23ம் தேதி பாரதிய ஜனதாவின் சிவ்ராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். ஏப்ரல் மாதம் ஐந்து பேர் மட்டுமே அமைச்சர்களாக பதிவு ஏற்றுக்கொண்டனர்.
சுமார் மூன்று மாதங்களாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 20 கேபினட் அமைச்சர்கள், எட்டு இணை அமைச்சர்கள் பதிவி ஏற்றுக் கொண்டனர்.
இதனால் மொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11 பேர் சிந்தியாவின் ஆதரவாளர்கள் ஆவார்கள். மூன்றில் ஒரு பங்கு மந்திரி பதவியை அவர் ஆதரவாளர்கள் பெற்றுள்ளனர்.
காங்கிரசில் இருந்து விலகி 22 எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவில் இணைந்தனர். இதில் 14 பேர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர். 10 பேர் கேபினட் அமைச்சர்களாவார்கள். நான்கு பேர் இணை அமைச்சர்கள். மொத்தம் உள்ள 33 அமைச்சர்களில் 14 பேர் காங்கிரஸ் பின்னணி கொண்டவர்கள்.
குவாலியர்-சம்பல் பகுதியில் இருந்து 11 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 24 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 16 இடங்கள் இந்த பகுதியை சேர்ந்தவைகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.